web log free
September 19, 2024
kumar

kumar

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் சபையின் பொது விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) தலைவராக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும், பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (கோபா குழு) தலைவராக  நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்ட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வினவிய போது, ​​இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித ஹேரத், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் பொது விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் தலைவராக பணியாற்றினார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதற்கு முன்னர் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

COPE மற்றும் COPA ஆகியவை பாராளுமன்றத்தின் இரண்டு முக்கிய குழுக்களாகும், அவை பொது நிறுவனங்களில் ஊழல், மோசடி, முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளை வழங்குகின்றன.

நாடாளுமன்றத்தின் சகல குழுக்களின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் அண்மையில் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, ​​சபாநாயகர் அதற்கு தெளிவாக ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு அண்மையில் தீர்மானித்தது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு முடிவடைந்த நிலையில் இரத்து செய்யப்பட்ட குழுக்களில் சில (கிட்டத்தட்ட எழுபது எண்ணிக்கை) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய குழுக்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த புதிய நிர்வாக சபையை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது கட்சியின் தவிசாளராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அப்பதவியில் இருந்து நீக்கி, அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ எந்த பதவியையும் ஏற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

இதன் படி, உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் உள்ள சரத்துக்களுக்கு மேலதிகமாக சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக, இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் துன்பத்தைத் தணிக்கவும், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்கவும் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2021 மார்ச் அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதுடன் வட கொரியாவை போன்று ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 க்கு முந்தைய காலத்தை போன்று தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல் வேண்டும் எனவும், யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதே இராணுவ மட்டத்தை பேணுவதாகவும் தமிழ் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்காக சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியுள்ள நிலையில் அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள், அவரை நீதிக்கான பொறிமுறைக்கு முன் நிறுத்துமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர். சுயாதீனமாக அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்துவவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐந்து தமிழ் கட்சிகளினதும் தலைவர்கள் கூட்டாக அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் காலி முகத்துவாரத்தை விட்டு வெளியேறிய பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தை சோதனையிட்டனர்.

அங்கு போராட்டக்காரர்கள் எப்படி கஞ்சா பயிரிட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் கூட அந்த இடத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்த பயன்படுத்திய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தியமைக்கு எதிராக மனு தாக்கல்இலங்கையின் ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை
நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எனினும் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

மேலும், அவசரகாலச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீள்பரிசீலனை செய்யுமாறும், திருத்தம் செய்யப்பட்டால் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

லிபரல் இளைஞர் இயக்கத்தின் அழைப்பாளர்களான சட்டத்தரணிகள் நமினி பண்டித மற்றும் ருசிரு எகொடகே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 28ம் திகதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.

நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சியுடன் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார்.