சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் தாம் இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தன.
குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுகையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி.
அத்துடன் இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்து ஆளும் கட்சி வரிசையிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசன வரிசையில் இன்று அமரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமயிலான ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழ்த் தேசிய கட்சி செயலாளர் சிவாஜிலிங்கம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினர் பொறுப்பு வகித்த, தமிழ்த் தேசிய கட்சி செயலாளர் சிவாஜிலிங்கம் தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.
தமிழக முதல்வர், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு தூதுக்குழு அமைத்து, டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து, தமிழ் ஈழமா அல்லது இலங்கையுடன் சேர்ந்து வாழ்வதா என்ற தலைப்பில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநில மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதற்கு வைகோ உதவி செய்ய வேண்டும் எனவும் கோரினார்.
இருவரும், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நீண்ட நேரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் உறுதிப்பத்திர வாடகை வீடு´ எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழிற்றுறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளுடன் கூடிய 09 வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு ஆரம்பக் கொடுப்பனவை செலுத்துவதற்கான இயலுமை இன்மையால், மாதாந்தம் 15,000/- ரூபா வாடகைப் பணமாக 31 வருடங்களுக்கு அறவிடுவதற்கும், இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரைக்கு வீட்டு உரிமையை ஒப்படைக்கக் கூடிய வகையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்வதற்கு இயலாத வகையிலும் பயனாளிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது சாரணர் இயக்கத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் ஒன்றும் இலங்கை சாரணர் இயக்கத்தின் தொடர்பாடல் ஆணையாளர் ருக்ஷானி அஸீஸால் பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை சாரணர் இயக்கத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் 70,000 சாரணர்கள் இணைந்திருக்கின்றனர். இவர்களில், விசேட தேவையுடைய சாரணர் குழுவும் அங்கம் வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
பொருளாதார துறையில் மட்டுமல்லாது, சகல துறைகளிலும் நாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சி என்றும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை திருப்திப்படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமயிலான ஆளுங்கட்சி நாடாளுமன்ற கூட்டம் இன்று அவசரமாக கூடுகின்றது.
இதன்போது, அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நின்று ஆவேசப்பட்டு அரசாங்கத்தை மோசமாக விமர்சிக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளும் இது பாரிய குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் உடனடியாக ஏதேனும் தீர்மானம் எடுக்காவிட்டால் நிலைமைகள் மோசமடையும் என பங்காளிக்கட்சிகளும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டு நிலைமையை அடுத்து நாளாந்தம் மக்கள் வீதிகளில் வரிசையில் நின்று தமக்கான பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மக்களின் ஆவேசமான செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தினால் அரசாங்கத்தில் பலரும் இது குறித்து அரச மேலிடத்துடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறிப்பாக பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக்கட்சிகளும் அரசாங்கத்தின் மீதே கடுமையாக பழி சுமத்தி வருகின்ற நிலையில் தற்போது ஆளுங்கட்சி பின்வரிசை உறுப்பினர்களும், அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூடுகின்றது. அலரிமாளிகையில் கூடும் இன்றைய கூட்டத்தின் போதும் நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்தும், உடனடியாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.